Skip to main content

சிறுநீர் கழிக்காததால் குழந்தைகளுக்கு வரும் வியாதி Ezhilarasan health tips

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்

எதற்காக இப்படி ஓடுகிறோம்?

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக் கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான கார ணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேட்டபோதுகூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுபிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலைகுலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும். அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா? ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள் ளும் பிரச்சினை. ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியேவிடுவார்கள் ஆசிரியர்கள். வளர்ந்த பிள்ளைகளேகூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்குரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?

பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பதுதான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்? தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக்கொண்டேதானே வளருகிறார்கள்!

யோசித்துப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன? இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின்போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அளவுக்கு வசதிகொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்? கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு. கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்துவிடுகிற பிள்ளைகள் உண்டு. சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்துவிடுகிற பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.

அரை லிட்டர் போதாது

பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச்செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார். “மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்கவைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை. எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.

ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்,
எழுத்தாளர்.

தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com

நன்றி :

தி இந்து  18 Oct 2016  

Comments

Popular posts from this blog

translation - How to get good sleep?

Tips for getting good sleep கீழ்க்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றினால், நல்ல தூக்கம் உங்களை ஆரத்தழுவிக்கொள்ளும்: Tips for getting good sleep. 1] பகல் தூக்கம் 30-40 நிமிடங்கள் போதும். Restrict your daytime sleep to 30 to 50 minutes. 2] மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். Exercises done in the evening will induce good sleep in the night. 3] தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரையைத் தவிருங்கள் அல்லது மாலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம்: அதிக சிறுநீர் வெளியேறக் காரணமாக இருக்கும் மாத்திரைகள். Avoid eating certain tablets that  generates excess urine or eat them in the evening itself. 4] இரவு எட்டு மணிக்கு மேல் காபி, மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது. Avoid drinking coffee, tea or alcohol after 8 pm. Also avoid smoking. 5] படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். Before you go to bed, drinking  lukewarm milk after taking a hot water bath will induce good sleep. 6] வெதுவெதுப்பான பாலில் இரண்டு டீஸ்...

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one...

Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem

  Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem In hot summer days, we sweat a lot.  வெப்பமான கோடை நாட்களில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வரும். . . Therefore, we lose a lot of SALT from our body through sweat.  எனவே, வியர்வை மூலம் நம் உடலில் இருந்து நிறைய  உப்பை  இழக்கிறோம். Hence, drink butter milk with enough SALT to compensate this salt loss. எனவே, இந்த உப்பு இழப்பை ஈடுசெய்ய போதுமான  உப்பு கலந்த   மொரைக் குடிக்கவும். You may also drink homemade lemon juice with added SALT and SUGAR or HONEY. வீட்டில் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பும் சர்க்கரையும் (அல்லது தேனும்) கலந்து ஜூஸ் செய்து நீங்கள் குடிக்கலாம். If you feel very tired you may be dehydrated.   நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு  நீரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.  If you suspect this please get  -ORS packets from a medical shop and mix it with water and drink it.  இதை நீங்கள் சந்தேகித்தால், தயவுசெய்து ஒரு மருத்து கடையில் இரு...