Skip to main content

Easy ways to FIGHT DEPRESSION? Tamil Venkatachalam health TIPS library

எதையும் ‘மூடு’ பார்த்துத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, யாரிடமும். சரி, இந்த ‘மூடு’ பற்றி என்றைக்காவது யோசித்திருக் கிறீர்களா? 

‘மூடு’ என்பதை மனநிலை என்று மொழிபெயர்க்கலாம். நல்ல மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படப்போவதில்லை.

சில சமயங்களில் கவலை, கோபம், வருத்தம், சோம்பல் போன்ற தீய மனநிலைகள், நாள் கணக்கில் நீடிப்பது உண்டு. அதை எப்படி நீடிக்கவிடாமல் செய்வது?

எளியவழிகள்

1. தீய மன நிலையை நல்லதாக மாற்ற மூச்சுவாங்கவைக்கிற உடற்பயிற்சிகள் உகந்தவை. அப்போது அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் பாயும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டு உடல் முழுவதும் ரத்தம் வேகமாகப் பரவும். இருபது நிமிடங்களாவது வேகநடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,மெல்ல ஓடுதல், கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

2. உடலுக்கு வைட்டமின்கள் வலுவூட்டுவதைப் போல வண்ணங்கள் மனதுக்கு வலுவூட்டும். மனதில் கோபமும் எரிச்சலும் உள்ளபோது, சிவப்பு நிறப் பொருட்களைப் பார்க்காமல் தவிர்க்கலாம். மனச்சோர்வின்போது கருப்பு, கரு நீலம் ஆகிய நிறங்கள் அதை அதிகமாக்கும். பிரகாசமும் விறுவிறுப்பும் கொண்ட நிறங்கள் மனதிலும் அப்பண்புகளை உண்டாக்கும். மென்மையான நீலவகை நிறங்கள் கவலையையும் மன இறுக்கத்தையும் தணிக்கும். நீல வானத்தையும் நீலக் கடலையும் பார்த்துக்கொண்டிருந்தால், சில நிமிஷங்களுக்குள்ளாகவே மனதில் அமைதி பரவும்.

3. ஒத்த இயல்பு இசை மருத்துவம் என்ற உத்தி மனதைச் சீர்நிலைக்குக் கொண்டுவரும். மனம் சோகத்திலிருக்கும்போது ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’போன்ற சோக ரசப் பாடல்களை நாடாப் பதிவுக் கருவியில் போட்டுக் கேட்கலாம். அதற்கு வசதியில்லாதபோது நாமே பாடலாம். இதைத் தொடர்ந்து, உற்சாகமூட்டும் நான்கு பாடல்களைக் கேட்க அல்லது பாட வேண்டும்.

4. உணவுக்கும் உள்ளத்துக்கும் இடையில் நெருக்கமான உறவு உண்டு. குளூக்கோஸ், அரிசி, கிழங்குகள், கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் மனதில் அமைதியை உண்டாக்கும். அவை மூளையில் செரட்டோனின் என்ற நரம்பு உணர்வுக் கடத்திகளின் உற்பத்தியை அதிகமாக்குகின்றன. அது மனதிலும் உடலிலும் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தி, அமைதியை உண்டாக்கும். புரதங்கள் மன ஆற்றலையும் செயலுறு திறனையும் நீடிக்கச் செய்யும். பருப்புகள், மீன், கோழி இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. சாக்லேட், காபி, தேநீர், கோலா போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் அவற்றிலுள்ள கஃபீன் மனநிலையைப் பாதித்துக் கவலையையும் எரிச்சலையும் அதிகமாக்கும்.

5. மங்கலான ஒளி மனதில் சோர்வை உண்டாக்கும். மழைக் காலங்களில் பலர் இதை அனுபவிக்கிறார்கள். காதலர்கள் மழைக் காலங்களில் கூடுதலாக வாடுவார்கள். நல்ல வெளிச்சமான, அதிக விளக்குகள் உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தைக் கழிப்பது உள்ளத்துக்கு உவகையூட்டும்.

6. ஆழ்ந்து தூங்கினாலே மனச்சோர்வு, கவலை, இறுக்கம் போன்றவை தணியும். தூங்கும்போது வரும் கனவுகள் அதற்கு உதவும். அவை மனதில் இறுக்கத்தை உண்டாக்கிய நிகழ்வுகளின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்யும். பல சமயங்களில் நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்கூடக் கனவுகள் வழங்கும். தூங்கியெழுந்த பின் மனம் லேசாகிப் புத்துணர்ச்சி பெற்றிருக்கும்!
***
THANKS TO 
TAMIL THE HINDU DATED 14.10.2015
RED HIGHLIGHTS BY Me
 EZHILARASAN VENKATACHALAM
Global Tamil Based English Trainer
Salem

Comments